கோலாலம்பூர், ஏப்ரல்.28- சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஜாகிர் நாயக் விவகாரத்தில் அவர் ஓர் இந்திய பிரஜை என்பதால் அவருக்கான பொறுப்பை இந்திய அரசாங்கமே ஏற்கவேண்டும் எனக் கோரும் மகஜர் ஒன்றை, மலேசியாவின் 28 அரசு சாரா அமைப்புக்கள், மலேசியாவுக்கான இந்தியத் தூதரகத்திடம் மகஜர் ஒன்றை இன்று வழங்கின.
இந்தியத் தூதரகத்திற்கு வெளியே நடந்த இரண்டு மணிநேர மறியல் போராட்டத்திற்குப் பிறகு, இந்த மகஜரை அரசு சாரா இயக்கத்தின் பிரதிநிதிகள் வழங்கினர். இந்த மகஜர் பிரதமர் நரேந்திரன் மோடியின் பெயரிட்டு தரப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் விவகாரத்தில் மலேசியா அரசாங்கம் பல கோரிக்கைகளுக்குப் பின்னரும் மவுனம் சாதிப்பதால், இந்த அமைப்புகள் இந்திய அரசாங்கத்தின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளன.
இந்த மகஜருக்குப் பின்னரும் இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் இந்தியாவுக்குச் சென்று இந்திய நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று 'தமிழர் குரல்' இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.
இதர அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள நமது நண்பர்களுடன் இந்த சட்ட நடவடிக்கைச் சாத்தியங்கள் குறித்து பற்றி நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
எங்களின் எதிர்ப்பு என்பதும் மறியல் என்பதும் இஸ்லாத்திற்கு எதிரானதோ அல்லது இதர சமயப் போதகர்களுக்கு எதிரானதோ அல்ல. இது முற்றிலும் ஜாகிர் நாயக் என்ற மனிதருக்கு எதிரானது. அவர் நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு மிரட்டலாக இருக்கிறார் என்பது மட்டுமே இதற்குக் காரணம் என்று டேவிட் மார்ஷல் சொன்னார்.
சில காரணங்களுக்காக மலேசிய அரசாங்கம் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. இதற்கான பொறுப்பை இந்திய அரசாங்கமே ஏற்கட்டும் என்ற நம்பிக்கையில் மலேசிய அரசு இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், பொதுவாக எது எப்படி இருந்தாலும் ஜாகிர் நாயக் ஓர் இந்திய பிரஜை என்று பினாங்கு தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளரான சதீஷ் முனியாண்டி கூறினார்.
பல இன மக்கள், பல சமயங்களைக் கொண்ட மலேசியாவில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே வெறுப்பைத் தூண்டும் ஜாகிர் நாயக்கின் செயல்களுக்கு மலேசிய ஒரு தளமாக அமைந்து விடக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம் என்றார் அவர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் அமைதியாகவும் நல்லெண்ணத்துடனும் இங்கு வாழ்ந்து வருகிறோம். ஜாகிர் நாயக்கின் வருகை அதற்கு மிரட்டலாகி விட்டது என்று அரச சாரா அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
சிறந்த கல்வியாளரான பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரியே, இந்திய அரசாங்கத்தைப் பற்றி தவறாகப் பேசும் அளவுக்கு ஜாகிர் நாயக் தன்னுடைய செல்வாக்கிற்கு உட்படுத்தமுடியும் என்றால், சாதாரண மக்கள் எம்மாத்திரம்? என்று மலேசிய இந்திய கல்வி உருமாற்ற இயக்கத்தின் தலைவரான ஏ.இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
மலேசிய அரசு சாரா இயக்கங்கள் இன்று வழங்கிய மகஜரை இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.